முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்



























 

 
 
நான் படித்துச் சுவைத்தவை - 1
 
பகவத் கீதையின் ஸாராம்சம்

"கர்மண் ஏவாதிகாரஸ்தே மாபலேஷு கதாசன
மாகர்ம பலஹேதுர்பூ மா தே ஸங்கோஸ்த்வகர்மணி"

நாம் ஒரு செயலைச் செய்யத் துவங்கும்போது, பலன் அமைவது நம் வசத்தில் இல்லை என்பது தெரிந்தாலும், பலனை எதிர்பார்த்துதான் நாம் செயல் புரிகிறோம். இந்த எதிர்பார்ப்பு, நம் விருப்பு, வெறுப்புகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை அடிப்படையாகக் கொண்டது. இந்த எதிர்பார்ப்பு பொதுவாக அனைவருக்குமே உள்ளது என்பதால், இது பிரச்சனை அல்ல. பலன் கிடைக்கும்போது நாம் அதை எதிர்கொள்ளும் விதம்தான் பிரச்சனையை உருவாக்குகிறது.

ஆனால், 'பலனை மனதில் கொண்டு செயல்படு. அந்தப் பலனை அடைவதற்குத் தகுந்த மாதிரி திட்டமிடு'. நன்கு செயல்படு. ஆனால், பலன் நீ எதிபார்த்த மாதிரி அமைவதில்லை என்றால், உணர்ச்சி வசப்படாதே, அதை ஏற்றுக்கொள்வதில் கோபம், சலிப்பு, தளர்வு, வெறுப்பு போன்ற எதிர்ப்பு உணர்வுகள் கொள்ளாதே.' இந்த ஸ்லோகத்தை இவ்வாறுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கிடைத்ததை பகவத் பிரசாதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
 
மனிதப் பிறவி
மனிதப் பிறவியைத் தவிர ஏனைய எல்லாப் பிறப்பிலும் உடம்பு குறுக்கே வளார்கின்றது. ஆடு, மாடு, யானை, பூனை, புலி, எலி என்ற எல்லாவற்றையும் பாருங்கள். அவை குறுக்கே வளர்கின்றன. மனிதன் ஒருவன்தான் மேல் நோக்கி வளர்கின்றான். முதுகு, கழுத்து, சிரம் என்பவற்றை நேரே அமைத்து பத்மாசனத்திலிருந்து ஜபம், தியானம், யோகம் புரிவதற்கு இம்மானிட உடம்பினாலேயே இயலும்.

ஏனைய உடம்புகள் அதற்கு ஏற்றனவல்ல. ஆதலினாலேயே அரிது அரிது மானிடராதல் அரிது என்கின்றார் ஒளவையார்.

நாம் உயர்வு பெற வேண்டுமானால்
நாம் எல்லோரும் உயர்ந்திருக்க வேண்டும். நம் வாழ்வு உயர வேண்டும் என்றுதான் கருதுகின்றோமேயன்றி அதற்குரிய வழிவகைகளை நாம் நன்கு சிந்திக்கின்றோமில்லை. சிந்தித்து அதனைச் செயல்முறையில் கொண்டு வருகின்றோமில்லை.
பணமும், படிப்பும், குணமும், பதவியும் நமக்கு நிச்சயமாய் உயர்வைத் தரமாட்டா. எனவே அவைகளை உயர்த்தும் முயற்சியுடன் நின்றுவிடக் கூடாது.
வேறு என்ன செய்தால் விரைவில் உயர்ச்சி பெறலாம் என்று அறிவுள்ளவார்களுக்குத் தோன்றும்?
நமது உள்ளம் உயர்ந்தால் நாம் உயர்வு பெற முடியும்.
நாம் கடவுளிடத்தும், மனைவி மக்களிடத்தும், நண்பர்களிடத்தும் அன்பு வைக்க வேண்டுமே தவிர ஆசை வைக்கக் கூடாது. இப்போ உங்கள் உள்ளத்தைச் சோதித்துப் பாருங்கள். அன்பு பிறவியைக் கொடுக்கும். ஆசை நிறைந்த உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் விளையமாட்டா. அங்கு கோபம், மயக்கம் என்பன வரும். ஆகவே நமது ஆசைகளை முதலில் களைய வேண்டும். திடீர் என்று ஒரே நாளில் இதனைச் செய்தல் இயலாதுதான் படிப்படியாக விடவேண்டும்.

அன்பு, ஆசை, அருள்
அன்பு என்றால் என்ன, அதன் சொரூபம் யாது என்று சிறிது சிந்திப்போம்.
ஒருவன் தன் மனைவி பிள்ளைகளுக்கு உடை, நகை போன்றவற்றை வாங்கிக் கொடுக்கின்றான் என்றால் அதை அன்பு என்றுவிட முடியாது. தான் கண்டு மகிழ வேண்டும் என்ற பயன் கருதிச் செய்வதனால் அது ஆசையாகும். தன் பிள்ளையைப் படிப்பிக்கின்றான் அது தன் முதமைப் பருவத்தில் தன்னைக் காப்பாற்றும் என்று. நண்பர்களுக்கு உயர்ந்த விருந்தளிக்கிறான் தன்னை மெச்சுவதற்காக.கடவுளிடம் போகின்றான் கடவுள் மீது கொண்ட அன்பாலா தனது ஆசைகளை நிறைவேற்றவே இப்போ நீங்கள் உங்கள் உள்ளத்திலே சிந்தித்துப் பாருங்கள் உங்களிடம் எவ்வளவு அன்பு உள்ளது என்று. எனவே இவை யாவும் ஆசைகளே.
அன்பு உடையவரே மனிதர், ஆசையுடையவார்கள் மனித விலங்குகள். அந்த அன்பு அருளாக மாற வேண்டும்.
அழுகின்ற குழந்தைக்குத் தாய் பால் கொடுத்தால் அது அன்பாகும். தெருவிலே அழுகின்ற குழந்தைக்குப் பாலும் பழமும் கொடுத்தால் அது அருளாகும்.

ஆசையுடையார்- விலங்கு
அன்புடையார்- மனிதர்
அருளுடையார்- தேவர்


தியாகம்.
அருளின் உச்சியில் பழுப்பது தியாகம். தியாகத்தின் சிகரத்தில் நின்றவர் காந்தியடிகள். அவருடைய வாழ்வு முழுவதும் தியாகந்தான். அவருடைய சொற்களில் தியாக மணிகள் உதிர்ந்தன. செயலில் தியாகப் பழங்கள் பழுத்தன. அவர் இறுதியில் தம் உயிரையே தியாகம் புரிந்து அமர வாழ்வு பெற்றுவிட்டார். அவரது தியாகம் இமயமலை போல் உயர்ந்து நிற்கின்றது. தன்னலமில்லாத நன்னலமுடைய அத்தியாகம் என்றும் குன்றாத மணி விளக்காக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. கல்லையும் கனிவிக்கும் அத்தியாகம் சொல்லையும் கடந்து துலங்குகின்றது.
சொல்லிலும் செயலிலும் பொதுநலம் பேண வேண்டும். கடவுளிடம் வேண்டுகின்ற போதுங் கூட, கடவுளே என்னை, என் குடும்பத்தைக் காப்பாற்று என்று கேட்கக் கூடாது. எல்லோரையும் காப்பாற்று உயிர்கள் யாவும் வாழ அருள் செய் என்று தியாக உணர்ச்சியுடன் கேட்டால் அது மனிதனைப் புனிதனாக்கும்.
 
 
மற்றவர்களுக்கு உதவுவது

சுயநலத்தோடு வாழ்வது புண்ணியமும் அல்ல... புத்திசாலித்தனமும் அல்ல! ஒரு மனிதன் ஆன்மாவை இழந்துவிட்டு, உலகத்தையே கைப்பற்றினாலும் அதில் என்ன பெருமை இருக்க முடியும்..? மற்றவர்களுக்கு உதவுவது என்றைக்காவது பலனளிக்கும். இது சத்தியம்.
ஒரு பிரிட்டிஷ் செல்வந்தர், தன்குடும்பத்தோடு ஸ்காட்லாந்துக்கு பிக்னிக் போனார். அங்கே, ஒரு தோட்டத்தில் விளையாடப் போன அவருடைய ஏழு வயது மகன் ஏரியில் தவறி விழ, தொலைவிலிருந்து ஓடிவந்த ஓர் ஏழைச் சிறுவன் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பணக்காரப் பையனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான். மறுநாள் அந்தச் சிறுவனைச் சந்தித்து நன்றி தெரிவிக்கப்போன அந்தச் செல்வந்தர், அந்தக் குடும்பத்தின் நிலைமையைப் புரிந்துகொண்டு, அந்தப் பையனின் எதிர்காலம் பற்றிக் கேட்க... என் அப்பாவைப் போல நானும் விவசாயி யாக வேண்டியதுதான் சார்! என்றான் அவன். படிக்க ஆசையில்லையா..? என்று இவர் கேட்க, ஆசைதான்! டாக்டராக வேண்டும் என்று ஆசை. வசதியில்லை! என்றான் சிறுவன். ஏன் டாக்டராக முடியாது..? நான் உன்னைப் படிக்க வைக்கிறேன் என்றார் பணக்காரர். அதிலிருந்து, அவனுடைய கல்விச் செலவு அத்தனையும் ஏற்றுக்கொண்டார்.

வருஷங்கள் கழிந்தன...

1943-ம் ஆண்டு, டிசம்பர் மாதம். வடஆப்பிரிக்காவில் தங்கியிருந்த (பிரிட்டிஷ் பிரதமர்) வின்ஸ்டன் சர்ச்சில் திடீரென நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டார். பிழைப்பதுஅரிது என்றார்கள். பென்சிலின் என்று புது மருந்து ஒன்றை அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார். அதுஒன்றுதான் காப்பாற்றும் என்று யாரோ தகவல் சொல்ல, ஃப்ளெமிங்குக்கு அவசர அழைப்புபோனது. உடனே ஒரு ஸ்பெஷல் விமானத்தில் பறந்து வந்த ஃப்ளெமிங், பிரிட்டிஷ் பிரதமருக்கு சிகிச்சை தர... உயிர்பிழைத்த சர்ச்சில், ஃப்ளெமிங்கைப் பார்த்து நன்றியுடன் இரண்டாவது முறை என்னைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்! என்று புன்னகைத்தார்.
 
 
நிம்மதியாய் இருக்க உபாயம்

சலிப்போ- களிப்போ எதுவானாலும் அதற்கு நம் நினைப்புத்தான் காரணமாகும். நம்மைப்பற்றியே நாம் கவலைப்படத் துவங்கினால் உலகத்திலே அதிக துன்பமுள்ள மனிதன் நாம் தான் என்று நமக்குத் தோன்றும். ஆனால் தன்னைப் பற்றியே யோசிக்கிற அந்த மனோபாவம்தான் மகிழ்ச்சியான நேரத்தில் தன்னைப் போல கொடுத்து வைத்தவன் யாருமில்லை என்று நினைக்க வைக்கும். வாழ்க்கையில் மனம் அதிகமாக அலட்டிக் கொள்ளாமலிருக்க எல்லோரைப் பற்றியும் அவ்வப்போது சிந்திக்கிற இயல்பை வளர்க்க வேண்டும்.

தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் ஒரு கதையை வாசித்தாலும் அல்லது ஒரு திரைப்படத்தைப் பார்த்தாலும் அதில் கதாநாயகன் தன்னைப் போலவே கஷ்டப்படுவதாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் அந்த கதையில் வரும் வில்லன் குணாதிசயத்தோடு நடப்பவர்களாகவும் அவர்கள் இருக்கலாம். தனது சம்பந்தப்பட்ட எதையும் நியாயப்படுத்துகிற பண்பு தன்னைப் பற்றியே சிந்திப்பதன் மூலம் ஏற்படுவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நன்றாக வாழ்பவர்களை நம்மோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நம்மிடம் ஏக்கப் பெருமூச்சு வெளிப்படும். நம்மை விட பெரிய பிரச்னையை வைத்துக் கொண்டு வாழ்பவர்களோடு எண்ணிப் பார்த்தால்தான் நாம் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அலட்டிக்கொண்டிருக்கிறோமே என்பதாக நாணம் வரும்.

வாழ்க்கையில் நாம் நிம்மதியாக இருக்க சில பழக்கங்களை கைகொள்ள வேண்டும். நாம் ஓர் உருப்படியான காரியம் செய்து அதற்கு தானாக பாராட்டு கிடைத்தால் அது தன்னை ஊக்கப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அதே சமயம் நாம் எதிர்பார்த்தபடி யாரும் பாராட்டா விட்டால் அதற்காக அலட்டிக் கொள்ளாமல் பாராட்டத் தேவையான திறனாய்வு அவர்களிடம் இல்லை என்று அமைதியாக இருக்கப்பழக வேண்டும். நம்மை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதை எதிர் பார்க்கக்கூடாது. அதே சமயம் நமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதில் நாம் அக்கறையோடு இருக்க வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் நாம் ஒதுங்கியிருப்பதே நம் மரியாதையை காப்பாற்றுவதாக இருக்கும். அதற்கு இணங்கவும் மனம் குறைபடாமல் ஒதுங்கியிருக்க பழகிக்கொள்ள வேண்டும். தேவைகளை பூர்த்தி செய்து மனநிறைவை அடைய வேண்டும் என்பதை விட தேவைகளை குறைத்துக் கொண்டு மன நிறைவை அடைய பழகிக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் நாம் எப்போதும் நிம்மதியாயிருக்க கைக்கொள்ள வேண்டியவை.