பகுதி 03
 

'எழில் நிலா'வின் சிறப்புப் பக்கம்

13 நிலம்
14 காற்று
15 ஆகாயம்
 
16 ஐயா, இது அமெரிக்கா
17 கல்யாணமாம் கல்யாணம்
18 நாணமே நீயிடும் அரிதாரம்


 
   
 
13. நிலம்

குங்குமம் குழைத்த சந்தனப் பந்தாய்
தோழியரோடு ராட்டினம் ஆடும்
மங்களப் பெண்ணே நிலமெனுந் தாயே
சக்கரம் இல்லாச் சொப்பனத் தேரே

கட்டி இழுக்கும் கயிறும் இல்லை
கடந்து செல்லும் சாலை இல்லை
கையை நீட்டி வழியைச் சொல்லும்
கடமைப் பணியில் எவரும் இல்லை

சொல்லடி அழகே பொறுமைக் கிளியே
போவது எங்கே பூமிப் பெண்ணே
ஆயிரமாயிரம் கோள்கள் இங்கே
ஆயினும் நீதான் கர்ப்பப் பையே

எத்தனை கோடி எத்துணைக் காலம்
எறும்பாய் புழுவாய் மனிதப் பிறப்பாய்
எல்லா உயிர்க்கும் அன்னை நீதான்
அண்டம் மீதில் அட்சயக் கருப்பை

கனவுகள் தொற்றி காற்றினில் ஏறலாம்
கற்பனை பிடித்து வானிலே ஆடலாம்
காலடி மட்டும் எங்கே வைப்பேன்
கருணைத் தாயே உன்னில் தானே

பேரிடி வந்து இடுப்பினில் இறங்க
பிள்ளைகள் ஈனும் மெல்லிய பெண்மை
மீண்டும் பிறக்கும் வல்லமை கொள்வது
மசக்கையில் உன்னை உண்பதால் தானே

காற்றின் சீற்றம் கடலை உசுப்பும்
புயலெனும் பேயும் உன்னை ஆட்டும்
கோப நெருப்பும் கொதித்துக் கிளம்பும்
உன்னுடல் கிழித்துப் புண்கள் சேர்க்கும்

வானம் கூட வம்பாய் உன்மேல்
காயம் ஆக்கும் கற்கள் வீசும்
தாயே நீயோ சகிப்பின் எல்லை
உயிர்கள் காக்கப் பொறுப்பாய் தொல்லை

உன்னில் இருந்தே உயிர்கள் பிறப்பு
உன்னைச் சேரவே ஒருநாள் இறப்பு
விண்ணில் ஏறும் மேகம் கூட
உன்னில் வாழ உனக்குள் குதிக்கும்

உன்னில் தோன்றி உன்னில் தவழ்ந்து
உன்னில் வாழ்ந்து உனக்குள் மாயும்
ஊனும் உயிரும் உன்றன் பிள்ளை
உயிர்கள் இன்றி ஒன்றும் இல்லை


14. காற்று

உதடுகள் தொட்டு ஒத்தட முத்தம்
ஓசைகள் இன்றி ஒத்துவதாரு
செவிகள் தொட்டு நித்தமும் கீதம்
சுரங்கள் சேர்த்துப் பாடுவதாரு

நாசிகள் தொட்டு நாளும் வாசம்
நெஞ்சம் கிறங்க நிமிண்டுவ தாரு
உயிரைத் தொட்டு உயிராய் நிறையும்
ஒவ்வோர் சுகமும் காற்றின் அசைவே

காற்றில் அலையும் பூங்கொடி தானே
நாட்டியம் ஆடப் பாடம் எடுத்தது
காற்றில் மிதக்கும் வாசனை தானே
சமையற் கலையைக் கற்றுத் தந்தது

நீரின் மீதினில் காற்றின் கோலம்
ஓவியம் தீட்டும் உள்ளம் ஈன்றது
மணலின் மீதினில் காற்றின் கோலம்
சிலைகள் வடிக்கச் சொல்லித் தந்தது

இலைகள் ஊடே காற்றின் ஜாலம்
இசையைத் தேடும் ஆவல் நெய்தது
கலைகள் யாவும் காற்றின் ஆடல்
இலக்கியம் கூட காற்றின் தேடல்

செவியும் மூக்கும் எப்படித் திறக்கும்
ஓசையும் வாசமும் காற்றால் பிறக்கும்
ஓசைகள் இன்றி மொழிகளும் இல்லை
மொழிகள் இன்றி உலகமும் ஊமை

ஒவ்வோர் ஜீவனும் தசைநார் பின்னி
உன்னதக் கூட்டை உடலுள் கட்டி
ஒவ்வொரு முறையும் ஏங்கித் தவிக்க
ஓடித் திரியும் நாடோடிக் காற்று

இதமாய்த் தழுவும் சுகமாய்க் காற்று
இதயம் வருடும் அன்பாய்க் காற்று
தலையைக் கோதும் கரமாய்க் காற்று
உயிரைப் பேணும் தாயாய்க் காற்று

மனதின் சோகம் பெருமூச் சாகும்
கடலின் சோகம் புயலாய் மாறும்
நிலமும் கூட நீள்மூச் செறியும்
நடுக்கத் தோடு பிளந்தே மூடும்

நீரின் நெருப்பின் சுவாசம் காற்று
நிலத்தின் காதல் தழுவல் காற்று
காற்றே இன்றி உயிர்கள் இல்லை
உயிர்கள் இன்றி ஒன்றும் இல்லை


15. ஆகாயம்

ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று
இதுதான் இறுதி என்பதும் இல்லை
ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று
அதுதான் பெரிது என்பதும் இல்லை

அணுவே சிறிது அண்டம் பெரிதென
அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை
அறிவுப் பயண எல்லைக் குள்ளே
ஆயிரம் ஐயம் தீர்வோ இல்லை

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்

நீரும் நிலமும் காற்றும் நெருப்பும்
வானம் இட்ட தேவப் பிச்சை
ஐம்பெரும் பூதம் என்பதும் தவறு
அனைத்தும் ஈன்ற வானம் வேறு

வானம் நிறைத்து விரிந்தே கிடக்கும்
வெற்றுப் பெருவெளி யாவும் இருட்டே
வானம் என்பதும் வையம் என்பதும்
அண்டம் என்பதும் எல்லாம் இருட்டே

விதையும் விதையின் உள்ளும் இருட்டு
வெளிச்சம் வாழும் வெளியும் இருட்டு
நிம்மதி கூட்டும் நித்திரை இருட்டு
ஆறுதல் சொல்லும் அமைதியும் இருட்டு

இயற்கை எல்லாம் இருட்டின் பிள்ளை
இருட்டே இன்றி வாழ்க்கை இல்லை
பிறப்பும் இருட்டு இறப்பும் இருட்டு
உயிர்கள் யாவும் இருட்டின் திரட்டு

கோள்கள் யாவும் இருட்டில் துகள்கள்
விண்மீன் கூட்டம் இருட்டின் கனிகள்
இருட்டில் இருந்தே எல்லாம் பிறப்பு
இருட்டே இன்றி எதுவும் இல்லை

நீண்டு விரிந்த மாபெரும் வெளியில்
பூமிப் பந்தும் ஒற்றைத் தூசு
ஒற்றைத் தூசின் உள்ளுக் குள்ளே
தூசுத் துகளாய் மனிதப் பிறப்பு

மனிதன் வாழும் ஆயுட் காலம்
இருட்டின் வயதில் பொருட்டே இல்லை
இருட்டே நிச்சயம் இருட்டே நிரந்தரம்
இருட்டே சத்தியம் இருட்டே பூரணம்


16. ஐயா, இது அமெரிக்கா

ஐயா இது அமெரிக்கா

கடன் அட்டை
இல்லாதான் வாழ்க்கை
கனவிலும் தைக்க இயலா
ஓட்டை

வீதி அழுக்கும்
விரும்பி வந்து ஒட்டாத
வறட்டு மொட்டை

அட்டைகளோ அட்டைகள்
என்று
ஆயிரமாயிரம் அட்டைகள்
இங்கே

எந்த அட்டை
இருந்தால் என்ன

கடன் அட்டை
இழந்தோரெல்லாம்
உடன் கட்டை ஏறுவோர்தான்



இன்றைய நிலையில்
அம்மா பிடிக்குமா
அப்பா பிடிக்குமா என்று
ஐந்து வயது பொடியனை
நிறுத்தினாலும்

கடன் அட்டைதான் பிடிக்கும்
என்றே ஓடுவானோ
என்ற ஐயம் தின்கிறது



ஆயிரம் சாகசங்களை
நிகழ்த்தி நிமிர்ந்தாலும்
ஓர்
அசிங்கமும் கிடைக்காது
"ஐலவ்யூ" சொல்ல

கடன் அட்டை மட்டும்
கொஞ்சம்
கண்ணில் பட்டுவிட்டால்
கிளியோபாட்ராதான்
கையணைவில்



கடன் அட்டையிலும்
அந்தத் தங்க அட்டை
கிடைத்துவிட்டாலோ

அலாவுதீன் பூதம்
தன்
முழுமொத்த சக்தியையும்
முறுக்கிக்கொண்டு
அப்போதே வந்து நிற்கும்
நம் உத்தரவிற்கு



வரிசை வரிசையாய்
கழுத்துப் பட்டை அணிந்த
நாகரிகத் திருடர்கள்

வாசல்வழியை
அடைத்தால்
தொலைபேசி வழி

தொலைபேசி வழியை
அடைத்தால்
மின்னஞ்சல் வழி

மின்னஞ்சல் வழியை
அடைத்தால்
கனவுவழி என்று

வந்து வந்து வழிவர்



நொந்த மனமுடன்
ஓர்
இதய வருடல் தேடி
ஊருக்குத் தொலைபேசினால்

"இங்கு மட்டும்
என்ன வாழுதாம்
அந்தச்
சனியன்தான்"

என்கிறாயே
நிஜமா தோழா
-----------------------------------------------
கடன் அட்டை - Credit Card,
கழுத்துப் பட்டை - Neck Tie


17. கல்யாணமாம் கல்யாணம்


ஊரலசி உறவலசி
உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
அணிவகுப்பார் பெண்பார்க்க

மூடிவச்ச முக்காடு
முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
தரிசனமும் கிடையாது

ஆடியோடி நிக்கயிலே
ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
உதைபடவும் வழியுண்டு

பாத்துவந்த பெரியம்மா
பழகிவந்த தங்கச்சி
நூத்தியரு முறைகேட்டா
நல்லழகுப் பெண்ணென்பார்

ஆத்தோரம் அல்லாடும்
அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
முடியாது மாத்திவைக்க

நாளெல்லாம் பேசிடுவார்
நாளன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
பரிசந்தான் போட்டிடுவார்

ஆளுக்கொரு மோதிரமாய்
அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
மாறாது வாக்குத்தரம்

முதல்நாள் மருதாணி
முகங்கள் மத்தாப்ப்பு
பதமாய் அரைத்தெடுத்த
பச்சைஇலைத் தேனமுதை

இதமாய்க் கைகளிலே
இடுவார் இருவருக்கும்

உதடுகள் ஊற்றெடுக்க
ஊட்டுவார் சர்க்கரையை

மணநாள் மலருகையில்
மாப்பிளை ஊர்வலந்தான்
குணமகள் வீடுநோக்கி
மணமகன் செல்லுகையில்

அனைவரும் வாழ்த்திடுவர்
அகங்களில் பூத்திடுவர்
புதுமணப் பெண்ணவளோ
புரையேறித் ச்¢ரித்திடுவாள்

வட்ட நிலவெடுத்து
வடுக்கள் அகற்றிவ்¢ட்டு
இட்ட மேடைதனில்
இளமுகில் பாய்போட்டு

மொட்டு மல்லிமலர்
மொத்தமாய் அள்ளிவந்து
கொட்டி அலங்கரித்தக்
குளுகுளுப் பந்தலிலே

சுற்றிலும் பெரியவர்கள்
சொந்தங்கள் நண்பர்கள்
சிற்றோடை சலசலப்பு
செவியோரம் கூத்தாட

வற்றாத புன்னகையும்
வழிந்தோடும் பெருமிதமும்
உற்றாரின் மத்தியிலே
உட்கார்வார் மாப்பிள்ளை

உண்பதை வாய்மறுக்க
உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
எல்லாமும் துடிதுடிக்க

கண்களில் அச்சங்கூட
கருத்தினை சைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
பொன்னெனச் சிவந்திருக்க

சின்னக் கரம்பற்றச்
சம்மதமா மணமகனே
மன்னன் கரம்பிடிக்க
மறுப்புண்டோ மணமகளே

என்றே இருவரையும்
எல்லோரும் அறியும்படி
நன்றாய்க் கேட்டிடுவார்
நடுவரான பெரியவரும்

சம்மதம் சம்மதமென
சிலிர்த்தச் சிறுகுரலில்
ஒப்புதல் தந்துவிட்டு
ஊரேட்டில் ஒப்பமிட

முக்கியப் பெரியோரும்
முன்வந்து சாட்சியிட
அப்போதே அறிவிப்பார்
தம்பதிகள் இவரென்று

சந்தோசம் விண்முட்டும்
சொந்தங்கள் இனிப்பூட்டும்
வந்தாடும் வசந்தங்கள்
வாழ்த்துக்கள் கூறிநிற்கும்

முந்தானை எடுத்துமெல்ல
முந்திவரும் கண்ணீரை
சிந்தாமல் துடைத்துவிட்டு
சிரிப்பாளே பெண்ணின்தாய்


18. நாணமே நீயிடும் அரிதாரம்

நீ
வைகறைப் பனிவிழும்
புல்மடியோ - மலை
வாழையில் வெடித்த பொற்
கனிநிலவோ

அந்தி
வானத்துச் சந்தன
ஒவியமோ - நதி
கடலுக்குச் சூட்டிடும்
நுரைச்சரமோ

முழு
நிலவு உன் கூந்தலில்
முகங்கழுவும் - வன
வண்டுகள் கண்களைக்
காதலிக்கும்

வான்
வசந்தம் உன் இளமையில்
அசைந்தாடும் - தேன்
அருவியுன் இடைவிழ
மனுப்போடும்

உயிர்
எழுத்துக்கு உன் பெயர்
உயிராகும் - உன்
நாணமே நீயிடும்
அரிதாரம்

நீ
நடப்பது நிலத்துக்குத்
தெரியாது - உன்
நினைவின்றி கனவே
விளையாது

மெல்ல
முகர்ந்தால் துவள்வது
அனிச்சமலர் - கண்
பார்வையில் துவளும் நீ
என்ன மலர்

உன்
நகத்தையே உறிஞ்சும்
செந்தேனீ - பொன்
விரலுக்கு வேண்டாம்
மருதாணி


   
நான்காவது பகுதிக்குச் செல்ல