8. வாழ்த்துரைகள் - 3  
 
மாலன்:அடுத்து வருகிறார் கற்பகம். இவரது எழுத்து உயிரெழுத்து. உயிர் சுமந்த மெய் எழுத்து. வரம் தரும் அந்தக் கற்பகம். வாழ்த்துரைக்க வருகிறார் இந்தக் கற்பகம்

எல்லோருக்கும் வணக்கம்.

"நான்புரிந்துகொண்ட அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால்தான் அவற்றைப் புரிந்துகொள்கிறேன்." - லியோ டால்ஸ்டாய்.

"ஊரும் உலகமும்
உறவும் சாட்சிகளும்
தப்பும் தவறுமாய்
மொழிபெயர்த்தாலும்
நடு நாசி சிவக்க
என் செயல் முகர்ந்து
முழுமனம் பூட்டி
உள் நியாயம் புரிந்த
உன் ஆறுதல் பரிசத்தில்
என்னுயிர் காக்க..
அன்பே நீயென்
உடன் வருவாயா...?

- புகாரி. அன்புடன் இதயம்

புலரிலும்,
பொழுதிலும்
புரிதலே வேண்டுகிறேன்
பராபரமே.

அருகிலே அழைத்து ஆறுதலாகப் பேசவொரு அன்பான இதயம் இருந்துவிட்டால் இமயம் போன்ற இன்னல்களும் எளிதாக இளகிவிடுமே... என எண்ணாத இதயமென்று இங்கேது பராபரமே.

குழந்தை அழுகிறது.. ஏன் என்று புரியவில்லை.
ஏன் என்று புரியவில்லை... அதனால் அழுகிறது.

ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு மனிதனையும்,ஒவ்வொரு பிரச்னையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதன் ஆழத்துக்கு, வேருக்குள் சென்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், புரியும்.. புரிந்தால் பல கவலைகள் தீரும்.

சரி, புரிந்துகொள்வது எப்படி, என்கிற கேள்வி எழும்பொழுது... உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்... வருவாயா? என்று அக்கறையோடு அழைக்கிறது கவிஞர் புகாரியின் இரண்டாவது கவிதைத் தொகுதி "அன்புடன் இதயம்"

"நான் புரிந்துகொண்ட அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால்தான் அவற்றைப் புரிந்துகொள்கிறேன்." - லியோ டால்ஸ்டாய்.

நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கத்துவங்கிவிட்டால் நிஜமான புரிதலும் மிக இயல்பாகவே வந்துவிடும். இந்த ஒரு மந்திரச் சூத்திரத்தைக் கையிலெடுத்துகொண்டு கருவறையில் உருவாகி, தாய்மொழியின் மடியில் தவழ்ந்து, தேசப்பற்றில் வளர்ந்து, பஞ்சபூதங்களையும், அண்டப்பெருவெளியினையும் கூடத் தொட்டுவிட்டு வருகிறது இந்த அன்புடன் இதயம். இது இக்கவிதைத் தொகுதியின் முதல் வெற்றி.


இது என் வாழ்க்கை, எனக்கு அருகாமையில் இருக்கும் பொருள், நான் தினமும் காணும் காட்சி என்று வாசிப்பவர்கள், தங்களோடு, தங்களது வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கின்ற வகையில் கவிதைகளின் பொருளடக்கம் அமைந்துவிடுமேயானால் அது ஒரு கவிஞன் காட்டுகின்ற அக்கறை, வாசகனுக்குக் கிடைத்த மாபெரும் பரிசு.

அன்புடன் இதயத்தின் ஒவ்வொரு அழைப்பும், ஒவ்வொரு குரலும், ஒவ்வொரு வரியும் இப்படி நம்மைச் சுற்றியே பின்னிப் பிணையப்பட்டுள்ளது.

படிப்பவர்களோடு ஒன்றிப்போய் கைகோர்த்துக் கொள்கின்ற கவிதைகள். இவை இக்கவிதைத் தொகுதியின் இரண்டாவது வெற்றி.


நடைமுறையிலில்லாத சொற்களையும், சாமானிய வாசகனுக்கு எட்டாத சிந்தனைகளையும்

திருத்தமாக வரிகளுக்குள் புகுத்திவிட்டுச் சிறப்பான கவிதை சமைத்துவிட்டோம் என்று பெருமைப் பட்டுக்கொள்வதில் என்ன பயன்? வாசகர்களில் பெரும்பான்மையானவர்கள் (எல்லோரும் அல்ல) பெரும் சிந்தனையாளர்களாகவோ இலக்கியவாதிகளாகவோ, மேதாவிகளாகவோ இருக்க மாட்டார்கள், என்று புத்தகம் எழுதி வெளியிடும் கவிஞரோ, அல்லது எழுத்தாளரோ நினைவில் கொள்ள வேண்டும்.

அறிவியல், ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எழுதுபவர்கள் இப்படி யோசிக்கத் தேவையில்லை.

அகராதியின் துணையின்றி எளிய நடையில் ஒரு நண்பனோடு பேசும் உணர்வை ஏற்படுத்தும் எளிய மொழி. இத்தொகுதியின் மூன்றாவது வெற்றி.


இப்படியாக அடுக்கிக்கொண்டே போகலாம் அன்புடன் இதயத்தின் சாதனைகளை. ஒரே வரியில் சொல்வதானால் ஆரவாரமில்லாது, மெல்லிய இசைக்கேற்ப அசைந்தாடி, அழகாக நெளிந்தோடும் ஒரு தெளிந்த நீரோடை.

"அன்புடன் இதயம்".

வரும் நாட்களில் இக்கவிதைகளோடு இழைந்து மகிழ வாய்ப்பளித்த தமிழ் உலக மட்டுநர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி.

"வா தமிழா...
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசலாம் வா.."

நன்றி, வணக்கம்.
கற்பகம்.



இங்கே சொல்லப்படுவது தண்ணீரின் இயல்பு நிலைக்குரிய ஒப்பீடு அல்ல. அப்படிப் பார்த்தால் h2+ O உள்ள திரவங்களை மட்டுமே தண்ணீருக்கு ஓப்பிடமுடியும். கவிதையில் திரவ நிலையில் உள்ள எல்லாவற்றுக்குமே தண்ணீரே தாய்/மூத்தவள் என்ற திரவ நிலை ஒப்பீடு மட்டுமே இருப்பதாக நான் நினைக்கின்றேன். கவிஞர் என்ன நினைத்து எழுதினாரோ..?

அன்புடன்,
புதியமாதவி



அடிப்படையில் தண்ணீராய்த்தான் உள்ளது. கண்கள் வழியே உணர்ச்சிப் பெருக்கால் வெளிவரும்போது உராய்வுகளால் வெதுமையடைகிறது என்பது எமது புரிதல் தம்பி

அன்புடன் ஞானவெட்டியான்



தண்மை என்ற சொல்லுக்குக் குளிர்ச்சி என்ற பொருளைத் தவிர, எளிமை, இன்பம், சாந்தம், மென்மை என்ற பொருள்களையும் அகரமுதலி தரும். ஆதலால், நீரின் தன்மை தன்னை எளியதாக்கிக்கொண்டு நமக்கு இன்பமும் நன்மையும் பயக்கும் தண்மை; வெப்பமானி வெதுவெதுப்பைக் காட்டும்போதும் அதன் தன்மை அவ்வாறே என்று கொள்ளலாம்.
அனந்த்



மாலன்: சர்ச்சைகளால் கவனத்தை ஈர்த்த சங்கதிகள் பல உண்டு. ஒற்றுமையால் நம் கவனததைக் கவர்ந்த இடமொன்று உண்டா? இருக்கிறது நண்பர்களே இருக்கிறது. அதன் பெயர் அமீரகம். அமீரகத்துக் கவிஞர் சாபு, வரம் பெற்ற வார்த்தைகளால் வாழ்த்துரைக்க வருகிறார். பிரியமானவரே வருக. பேரீச்சம் பழம் தருக.


அனைவருக்கும் என் அன்பான வணக்கம்!

சனவரித் திங்கள் அமீரகத் தமிழ் அமைப்புகளில் ஒன்றான ' துபாய் தமிழ்ச் சங்கம்' நடாத்திய பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக
அழைக்கப்பட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். பொங்கலை ஒட்டி பாடிய ஓர் கவிதையில், கவிஞரொருவர்...

புள்ளிராஜா பொங்கல் கொண்டாடுவாரா ?
இல்லை
பெண்களை கொண்டாடுவார்
புள்ளிராஜா

என்ற கவிதையை கேட்டு கனத்த இதயத்தோடு வந்த எனக்கு, கவிஞர்.புகாரியின் ' அன்புடன் இதயம்' கனத்த இதயத்திற்கு மருந்தாக அமைந்தது.

விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்

என்ற வரிகளை படித்த போது, மனசாட்சியிடமிருந்து ஓர் கூவல்,'

அய்யா..
இதுவரை நீ எழுதியதெல்லாம் தமிழல்ல கவிஞர்.புகாரியின் வரிகளைப் படித்து விட்டு எழுதத் துவங்கினாயே இதுதான் தமிழ்' என்றது. நிதர்சனமான உண்மை, என் விரலும் நிமிர்ந்து 'தமிழ்' எழுதத் துவங்கியது. என்ன வரிகள் இவை. இப்படியே இக் கவிதையின் ஒவ்வோர் வரிகளும் வைர வரிகள். அதியமானுக்கு வாழ்நாளை நீட்டித்தரும் ' நெல்லிக்கனி' கிடைத்தபோது, தமிழ் வாழ வேண்டுமென்பதற்காக அந்நெல்லிக்கனியை ஒளவைக்கு கொடுத்தானாம். அதுபோல எனக்கும் ஓர் நெல்லிக்கனி பாலைவனத்தில் ஏது நெல்லிக்கனி ஓர் பேரீத்தம் பழம் கிடைத்தால், கவிஞர்.புகாரிக்கு கொடுத்திடுவேன். அரபி மொழியில் 'சாதிக்' என்றால் நண்பன். நண்பர் கவிஞர். புகாரி ஏற்கனவே வெளி(ச்ச) அழைப்பு கிடைத்து சாதித்து விட்டார். இன்னும் சாதிக்கப் போவது 'சாகித்ய அகாதெம'¢ யாகவுமிருக்கலாம்.

இவரை வாழ்த்திட, விமர்சித்திட, பாராட்ட எனக்கு தகுதியில்லை. வளம் பல படைத்து வலம் வர வல்லோனை வாழ்த்தி விடை பெறுகிறேன். வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

நிறைந்த இதயத்துடன்
சாபு



மாலன்: கவிதை அறிந்தவர் இதயத்தில் எப்போதும் இக்பாலுக்கு இடமுண்டு. 'சாரே ஜகான்ஸே அச்சா' என்று சொன்ன அந்தக் கவியை மட்டும் சொல்லவில்லை. சிங்கைக் கவிஞரையும் சேர்த்தே சொல்லுகிறேன். ஆசியான் விருது பெற்ற நேசக் கவிஞர் நம் இக்பால். தமிழுக்குத் தரப்படும் தென்கிழக்காசிய விருது அது. பொன் எழுத்துக்களால் புதுப் புதுக் கவிதைகள் செய்பவருக்குப் பொருத்தமான பரிசு என்ன? தங்கப் பேனாதானே? அந்தப் பரிசையும் வென்றவர் இக்பால். அவர் பெற்ற பரிசுகளைச் சொல்ல ஆரம்பித்தால் அது சுவர் போல நீண்டு செல்லும். சிங்கைத் தமிழ் கொண்டு எங்கள் நெஞ்சை நிறைத்தவரே வருக. இளந்தமிழன் புகாரியை இனிய கவி கொண்டு வாழ்த்துக.


இனிய இணைய விழாவின் தலைவர் அவர்களே!

இந்த அற்புத, அற்புதமான பல கவிதைகளை அடக்கிய உங்கள் இதயம், உங்கள் நூலில் தெரிகிறது.

எந்தக் கவிதை நூலையும் நான் முதல் பக்கத்தில் இருந்து வாசிக்கத் துவங்குவதில்லை. கை திருப்பிய பக்கத்தில் கண் விழும்.உங்கள் நூலையும் அவ்வாறே திருப்பினேன். முதலில் மின்னலடித்த கவிதை- "

ஐயா இது அமெரிக்கா ".அதன் முதல் கண்ணியே ஓர் அதிர்வை ஏற்படுத்துகிறது:

"கடன் அட்டை
இல்லாதான் வாழ்க்கை
கனவிலும் தைக்க இயலா ஓட்டை !"

எவ்வளவு பெரிய உண்மையைச் சொல்லிவிட்டது இந்தவரி! அமெரிக்காவில் மட்டுமா இந்த நிலை...!

"அலாவுதீன் பூதம்
தன் முழுமொத்த சக்தியையும்
முறுக்கிக் கொண்டு
அப்போதே வந்து நிற்கும் நம் உத்தரவிற்கு .."
ரசித்தேன் !

கவிதைகளை ஒரே வாசிப்பில் புரிந்துகொள்ள முடியாது என்பார்கள்.நின்று நிதானமாக அமைதியான சூழலில் படித்து அனுபவிக்க வேண்டிய கவிதைகள்! மீண்டும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தமிழ் உலகம் நடாத்தும் இவ்விழாவின் மூலம் கூறிக் கொள்கிறேன்.

இயற்கைக் கவி
..........................

அன்புடன் இதயம் என்னும்
அருங்கவி மாலை கட்டி
இன்புற எமக்குத் தந்த
எழில்மிகு புகாரி நின்றன்

கன்னல்சேர் தமிழும் ஞானக்
கற்பனை வீச்சும் சோலைத்
தென்றலும் அருவிப் பாட்டும்
திங்களும் எமக்கொன் றாகும்



வித்தாரக் கவிகள் நூறு
விரைந்துநீ பாடு கின்றாய்
சத்தான வரிகள் தோறும்
சந்தங்கள் மீட்டு கின்றாய்

பத்தோடு பதினொன்றாகப்
பாவல உன்னை வையேன் !
முத்தாரக் கவிநீ எங்கள்
முன்னணிப் புலவன் அன்றோ



இன்றுபோல் கவிகள் பாடி
இதயங்கள் ஆள்க நீயே ;
ஒன்றுபோல் தலை நிமிர்ந்தே
ஒளிர்கஉன் சிந்த னைகள் ;

மன்றுளே புகழ்கு விக்கும்
மாணிக்கக் கவியே என்றும்
நன்றுநீ வாழ வல்லான்
நல்லருள் வேண்டுகின்றேன்



அன்புடன்

க.து.மு.இக்பால், சிங்கப்பூர்



அன்பு நண்பர் நாக.இளங்கோவன்: ஆற்று நீரும் அருவி நீரும் நம் அழுக்கை அப்புறப் படுத்துபோல இந்தக் கண்ணீரும் நம் மன அழுக்கை - சோக அழுக்கை அப்புறப் படுத்தி விடுகிறது. அழுக்கெடுப்பை நினைத்தால் தண்ணீர்தான் முதலில் ஞாபகத்திற்கு வருகிறது.
அன்புடன் இக்பால்



கண்ணீர் வரும்போது உடனிருப்பவர்கள் மனத்தை நெகிழச் செய்வதால் அதனைத் தண்மை (உருவாக்கும்) நீர் என்று கவிஞர் குறிப்பிடுகிறார்.
என் புரிபாடு.

அன்புடன், நா. கணேசன்



அன்பின் நண்பர்களே,

பெரிய பந்தல் போட்டு அமர்க்களமா விழா நடக்குது. பெரிய பெரிய ஆட்களெல்லாம் வந்து வாழ்த்து சொல்லிட்டு இருக்காங்க.

ஆளாளுக்கு வாழ்த்து சொல்லி அசத்துறாங்க. தொண்டர்படை வேற சாப்பாடு போட்டே ஆளைக் கொன்னுடுவாங்க போலிருக்கு.

தலையிருக்கும்போது வாலாடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. பெரிய பெரிய தலைங்க எல்லாம் புகாரி அண்ணனை வாழ்த்தும்போது எங்க ஆசான் திருவோட சேர்ந்து நானும் ஒரு ஓரமா நின்னு கைதட்டிக்கிட்டு இருக்கேன். எப்பவாவது உணர்ச்சிவசப்பட்டு விசிலடிச்சிட்டேன்னா முதுகுல ரெண்டு போட்டுடாதீங்க.

ஓரமாக நின்றாலும் ஒதுங்கி விடாத
ஆசிப் மீரான், துபாய்



எல்லாரும் என்னை மன்னிக்கணும். தலைவர் பாரத்தின் சொல்படி ஒலிவாங்கி அருகே நின்னு உயர்த்தி-தாழ்த்தி வெச்சு வெச்சு.. ஒலி வாங்கி வலைஞ்சதோ இல்லையோ.. என் குருத்தெலும்பு வலைஞ்சு போச்சு..

கொஞ்சம் இளனி குடிக்கலாமுன்னா, பச்சை தண்ணிய குடுதுட்டு போராரு அன்பு.. கேட்டா 'இதுவே உனக்கு ஜாஸ்தி' அப்டின்னு வையாபுரிமாதிரி சொல்லிட்டு போறாரு.. அடடா.. அது சரி.. சீக்கிரம் போய் வயிற்றுக்கு ஈதல் செஞ்சுட்டு வரேன்.

 
 

'எழில் நிலா'வின் சிறப்புப்பக்கம்