1. விழா அறிவிப்பும் பாராட்டுகளும்  
 

அன்பு தமிழ் உலகத்தாருக்கு,

இணையத்தில் முதல் புத்தகம் வெளியீட்டு விழா!

நம் தமிழ் உலக ஆஸ்தானக் கவிஞர் நண்.புகாரி, சமீபத்தில் கனடாவில் சிறப்பாக தனது "அன்புடன் இதயம் " புத்தகத்தை வெளியிட்டார். சிலமணி நேரப் பயண தூரத்தில் நடந்த அந்த இனிய விழாவிற்குச் செல்ல முடியவில்லை என்று வருந்தினேன்; விழா முடிந்த பிறகு அவரைச் சுற்றிலும், அருகிலும் வசிக்கும் நண்பர்கள் கூட விழாவுக்கு வர இயலாமற் போனதை அறிந்தேன்.

திடீரென்று ஓர் எண்ணம் உதயமானது. மண்டபம் பிடித்து, தோரணம் கட்டி, விழா பதாகைகள் தகதகக்க.....ம்ம்ம்ம் இன்னும் விழாத்தலைவர் வரலையே; தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுகின்றேன் என்று நெஞ்சாரச் சொன்னவரைக் காணோமே; விழாத் துவங்கும் முன் அரங்கம் நிறைந்திடுமா? என்ற கவலைகள் இல்லாமல் நாம் ஓர் விழா நடத்தினால் என்ன?

ஆம்! நண்பர்களே! தமிழ் உலக இணையப் பந்தலில் புத்தக வெளியீட்டை நடத்தினால் என்ன? நடத்தினால் என்ன... நடத்துகிறோம். இணையத்தில் நடக்கும் முதல் புத்தக வெளியீட்டு விழாவாகவும் இது அமையப் போகிறது!

பிப்ரவரி 2வது வாரம், அதாவது எட்டாம் தேதி துவங்கி ஒருவாரகாலம் வெளியீட்டுவிழா நடக்கும்! உலகிலுள்ள அனைவரும் விழாவில் ஒரு நாள் கலந்து கொள்லவில்லையென்றாலும் அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ கலந்து கொண்டு அவரின் கவிதை நூலை விமரிசித்து வாழ்த்துங்கள்! வாழ்த்து எனும் பூவை கூடை..கூடையாகக் கொட்டுங்கள்; கவிதையில் உடன்பாடில்லையா? நயத்தகு நாகரிக வார்த்தைப் பூ பந்தால், அர்ச்சியுங்கள்!

விழா என்றால் ஒரு தலைவர் வேண்டாமா? என்று ஒரு சத்தம் என் காதில் விழுகின்றது! என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? இந்த விழாவுக்கு தலைமை தாங்கப் போறதும் ஒரு கவிஞர்தான்! அது யார்? பிப்ரவரி முதல்வாரத்தில் விழாத்தலைமை, விழாக்குழு மட்டும் அறிவிக்கப்படும்! முன்னிலை, வரவேற்புரை, சிறப்புரை, நன்றியுரை எல்லாம் விழாப்பந்தலுக்கு யார் முன்னதாக வருகின்றார்களோ அவர்களே தாமாக நிகழ்த்தலாம்; இறுதியில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கவிப்படுவார் கவிஞர் புகாரி!

எல்லாம் சரி, நாங்க கவிஞர் புகாரியின் "அன்புடன் இதயம்" நூலைப் பார்க்காம, படிக்காம எப்படி விமரிசிக்கப் போறோம் என்ற கேள்வி சற்று உரக்கவே என் காதில் விழுகிறது. என்ன கேள்வி கேட்டுட்டீங்க? தாலி இல்லாமல் கல்யாணமா? மலர் இல்லாமல் மாலையா?

எல்லோரின் கரங்களிலும் அன்புடன் இதயம் கவிதை நூலைத் தவழவிடுகின்ற வாய்ப்பை கவிஞர்.புகாரி ஏற்றுக் கொள்கின்றார்.... தமிழ் உலகம் மூலமாக~!

தமிழ் உலக உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்ற இணைய விழா அல்ல; தமிழ் ஆர்வலர்கள் உள்ள எந்தக் குழுவிலிருந்தும் இந்த விழாவில் கலந்து கொள்ளலாம்; சிறப்பிக்கலாம்; வழக்கம் போல பார்வையாளர்கள் பகுதி நிரம்பியிருக்கக் கூடும்; ஆனால் பார்வையாளர்களும் எங்க அண்ணன் புகாரி இந்தப் புத்தகத்தில் எழுதியிருந்த இந்த வரி எனக்குப் புடிச்சிருந்தது என்றும், எங்க மச்சான் புகாரிக்கு 32வது வட்டத்தின் சார்பில் இந்த மலர்மாலையை மாணிக்க மாலையாகச் சூடி...... என்று வாழ்த்தும் பங்கேற்பை எதிர்பார்ப்போம்;

உலகின் முதல் இணையவெளி புத்தகம் வெளியீட்டிற்கு அனைவரையும் வருக வருகவென்று வரவேற்கின்றோம்.

அன்புடன்,
பழனி,
ஆல்பர்ட்,
மணியம்.
(தமிழ் உலக மட்டுநர்கள்)



புத்தாண்டில் நல்ல முயற்சி மட்டுநர்களே. அதோடு புதுமையான முயற்சியும் கூட. நண்பர் புகாரியின் நூலோடு துவங்கும் இம்முயற்சியும் விழாவும் இனிதமைய வாழ்த்துக்கள்.

அன்புடன் நாக.இளங்கோவன், தமிழ்நாடு



இதுதான் உண்மையான புத்தாண்டுப் பரிசு. அடிச்சு தூள் கெளப்புங்கோ அப்பு !

அன்புடன் சாபு, துபாய்



வணக்கம் அவைத் தலைவருக்கும் புதிய கலை மண்டபத்தில் கூடி வாழ்த்த வந்த கவி உள்ளங்களுக்கும் என் அன்பு வணக்கங்கள் வளர்க கலைத்தொண்டு!!! கவிஞரின் புத்தக வெளியீட்டை இங்கு எதிர்பார்த்துக்கொண்டு .....

அன்புடன் திரு, ஒட்டாவா, கனடா



வித்தியாசமான ஒரு முயற்சி. வெற்றிபெற வாழ்த்துக்கள்!

நட்புடன் எழில்நிலா மகேன், டொராண்டோ, கனடா



ஆகா! மிக அருமையான முடிவு! நான் ஏற்கெனவே புத்தகத்தைப் படித்துவிட்டேன் (சென்னைக்குப் பணம் அனுப்பி வாங்கிப்படிதேனாக்கும்!) நான் விழாவில் அவசியம் கலந்துகொள்வேன். தமிழ்-கூரும்- நல்லுலகின் முதல் இணைய நூல்வெளியீட்டு விழாவில் நண்பர் புஹாரியின் கவிதைகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகளாவது நான் அவசியம்
சொல்லியாக வேண்டும்!

இந்த நல்ல யோசனைக்காக நண்பர்கள் பழனி,ஆல்பர்ட்,மணியம் மூவருக்கும் எனது பாராட்டுதல்களையும் முதல் இணைய நூல்வெளியீட்டு விழாவின் நாயகர்
கவிஞர் புஹாரிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் முதலிலேயே தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அன்புடன், நா.முத்து நிலவன், புதுக்கோட்டை, தமிழ்நாடு

பி.கு: ஏதேது... ஆண்டுத்தொடக்க நாளிலேயே நம் மட்டுறுத்துனர்கள் அசத்திவிட்டார்களே! இந்த வருடம் பூராவும் இப்படியே நல்ல செய்திகள் தொடரட்டும்!



ஆமாம்! திரு. முத்து நிலவன். இது ஒரு ஆரோக்கியமான ஆரம்பம்! இது மாதிரி நிறைய நல்ல விடயங்கள் இன்னும் பல இங்கு இடம்பெற நாம்தான் மட்டுறுத்துனர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்க வேண்டும். நன்றி!

நட்புடன், மகேன். எழில் நிலா, டொராண்டோ, கனடா



அன்புள்ள கவிஞர் புகாரி: விழா பற்றிய தகவல்கள் ,படங்கள் அனைத்தும் கண்டு ரசித்தேன்! கவிஞர் பசுபதியின் பாராட்டுப் பாடலும் தங்களின் நன்றியுரைக் கவிதையும் அருமை! நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமற் போய்விட்டதே என்று வருந்தினேன்.
அன்புடன் இக்பால், சிங்கப்பூர்

அன்பு நண்பர் இக்பால் வருந்த வேண்டாம். இப்போது தமிழ் உலகில் நடைபெற உள்ள நூல் வெளியீட்டு விழாவில் சிங்கை சார்பில் கலந்துகொண்டு சிறப்புச் செய்யுங்கள்.
அன்புடன் பழனி, சிங்கப்பூர்

அன்பு நண்பர் பழனி, நன்றி..... நிச்சயம் கலந்துகொள்வேன். புதுமாதிரியான வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்ட உங்களுக்கும் பிற மட்டுறுத்துநர்களுக்கு நெஞ்சு நிறைந்த பாராட்டுகள்.
அன்புடன் இக்பால், சிங்கப்பூர்



இனிய தமிழ் உலகத்தார்க்கு, கவிஞர் புகாரி அவர்களின் இரண்டு கவிதை நூல்களையும் புறாவின் கால்களில் கட்டி மும்பைக்கு அனுப்பியிருந்தார்.!! வந்து இரண்டு வாரம் ஆகிறது. என் விமர்சனமும் ஒரளவு மனதில் எழுதியாகிவிட்டது. என் விமர்சனத்திற்கும் இடமுண்டு அல்லவா.. நல்ல ஆரோக்கியமான தளத்திற்கு உயர்ந்திருக்கின்றோம். வரவேற்பும் வாழ்த்தும்.. (அட நீ ஒண்ணுமா அப்போ இதுவரை ஆரோக்கியமில்லாத தளத்திலா இருந்தோம்னு ஏதாவது குண்டக்க மண்டக்க அர்த்தம் பண்ணிக்காதீங்க.. அண்ணன்மார்களே..!!)

அன்புடன், புதியமாதவி, மும்பை



வணக்கம். நேரில் வந்து கலந்து கொண்டு ரசிக்க முடியாவிட்டாலும் கவிதைகளை இணையத்தில் வெளியிட்டு எம்போன்றோரை அக் கவிதைகளைச் சுவைக்க சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றிகள் பல

அன்புடன் திரு, ஒட்டாவா, கனடா



பலே! பலே! இது ரொம்ப நல்லாயிருக்கே! ஆரம்பமே ஜோருங்கோவ்! பட்டாசு விடும் சிறுவன் என்று என் பெயரைப் போட்டிருக்கலாம்..! இருந்தாலும் பற்றவைக்கிறேன்.... பட்டாசை!

அன்புடன், நா.ஆனந்த குமார், சென்னை



அன்பினியவர்களே, என் இனிய நண்பர் எழில் நிலா மகேன் தன் வலைத்தளத்தில் எழில் கொஞ்ச வலையேற்றியிருக்கிறார் அன்புடன் இதயத்தை அருமையான யூனிகோட் வலைத்தளம். புத்தகத்தில் கறுப்பு வெள்ளையில் வந்த படங்களை அதன் இயற்கை வண்ணங்களின் கண்டு மகிழ சொடுக்குங்கள்

http://www.ezilnila.com/anpudan.htm நன்றி எழில் நிலா மகேன்.

அன்புடன் புகாரி

 
     
 

'எழில் நிலா'வின் சிறப்புப்பக்கம்